எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் இரண்டாவது முறையாக இணையும் படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஆகியோரது நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட படம் மான்ஸ்டர். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்திற்கு பொம்மை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தலைப்பு இதற்கு முன்னதாக எஸ்.பாலசந்தர் இயக்கத்தில் வி.எஸ்.ராகவன், எம்.விஜயலட்சுமி ஆகியோரது நடிப்பில் வந்த த்ரில்லர் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் கலந்த த்ரில்லர் கதையை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாக்கப்படுகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவே ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். அண்மையில், இப்படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில், நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

காதலை மையப்படுத்திய படம் என்பதால், வரும் 2020 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.