ருசியான ஈஸியான ரசகுல்லா…!

குலாப் ஜாமூனுக்கு அடுத்த படியாக பலரும் விரும்பி சாப்பிடுவது ரசகுல்லா தான். இந்த ரசகுல்லா செய்வதற்கு பலருக்கும் தெரியாது. மேலும் இதனை எப்படி செய்வதென்று பலரும் இணையதளத்தில் தேடியிருப்பார்கள். இருப்பினும் சரியான செய்முறை கிடைத்திருக்காது.

தேவையான பொருட்கள்:

பால் – 1/2 லிட்டர்

எலுமிச்சை சாறு – 1 1/2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 1 மற்றும் 3/4 கப்

ஐஸ் கட்டிகள் – 4-5

சர்க்கரை – 3/4 கப்

ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை

பிஸ்தா – 3-4

செய்முறை:

முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பாலானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் எலுமிச்சை சாறு சேர்த்து பால் நன்கு திரியும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும். பாலில் இருந்து தண்ணீர் முற்றிலும் பிரிந்ததும், அடுப்பை அணைத்து, பின் பாலில் ஐஸ் கட்டிகளை சேர்த்து, ஐஸ் கட்டிகளை உருக வைக்கவும். ஐஸ் கட்டிகள் முற்றிலும் உருகியதும், அதனை மஸ்லின் துணியில் ஊற்றி அதில் உள்ள நீரை முற்றிலும் வடிகட்டி, ஓடும் நீரில் மஸ்லின் துணியில் உள்ள திரிந்த பாலை எலுமிச்சை வாசனை முற்றிலும் போகும் வரை நன்கு கழுவ வேண்டும். பின் அதில் உள்ள நீரை வடித்து, 30 நிமிடம் தனியாக வைக்க வேண்டும். பின்பு மஸ்லின் துணியில் உள்ள அந்த திரிந்த பாலை ஒரு தட்டில் போட்டு, அதனை பிசைய வேண்டும். பிறகு அதனை சிறு உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்க விட வேண்டும்.

சர்க்கரை நீரானது ஓரளவு கெட்டியான பின் அதில் உருட்டி வைத்துள்ளதை போட்டு, குறைவான தீயில் 3 நிமிடம் வேக வைக்கவும். பின் மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். முக்கியமாக இந்நேரத்தில் 3 நிமிடத்திற்கு ஒருமுறை மூடியை திறந்து பார்க்க வேண்டும். இறுதியில் அதனை இறக்கி, குளிர வைத்து, அதன் மேல் பிஸ்தாவை தூவினால், ரசகுல்லா ரெடி.