அறுபதாம் கல்யாணத்தின் சிறப்பு!

ஒரு மனிதனுக்கு 59 ஆண்டுகாலம் பூர்த்தியானவுடன் 60ஆம் ஆண்டு பிறக்கும் தருணத்தில் செய்யப்படும் திருமண நிகழ்வானது உக்ர ரத சாந்தி என்று அழைக்கப்படுகின்றது.

திருமணமான தம்பதியர்களில் கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம் ஆகும். இதை சஷ்டியப்தபூர்த்தி என்றும், மணிவிழா என்றும் அழைக்கப்படுகின்றது.

இத்திருமணத்திற்கு என்று தனித்துவமான காரணமும் சாஸ்திரங்களில் உரைக்கப்பட்டுள்ளன. அது என்ன காரணம் எனில் இல்லற வாழ்வில் ஈடுபட்டு அறுபது வயது வரை வாழ்கின்ற மனிதன் உலகியலில் இருக்கக்கூடிய இன்ப, துன்பங்களில் சிக்கி என்ன செய்வதென்று அறியாமல் தனது பிறவியின் நோக்கம் யாதென்று தெரியாமல் தவிக்கிறான். அவ்வகையில் தெளிவு பிறக்கும் வாழ்க்கையில் பாதி தருணங்கள் கடந்து செல்கின்றன.

அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பாதுகாத்தல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக்கடமைகளை நிறைவேற்றுவதற்காக ஒடத் துவங்குகின்றான்.

அவர்களை வளர்த்து ஆளாக்கிய பின்பு புத்திரர்களையும், உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும், சுதந்திரமாக விடுத்து கடவுளை முழுமையாக சரணடைய வேண்டும். இந்த ஆன்மிக கடமையை நினைவுப்படுத்தும் நோக்கில் இந்த சஷ்டியப்தபூர்த்தி நிகழ்ச்சியானது நடத்தப்படுகின்றது.

ஒரு மனிதனின் இல்லற கடமையை நிறைவேற்றிய மனநிறைவுக்காகவும் அறுபது ஆண்டு கால வாழ்க்கையில் யாருக்கும் ஏதேனும் அறிந்தோ, அறியாமலோ தீங்கு இளைத்திருந்தால் அதற்காக இறைவனிடம் மனமுருகி தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்பதற்கான ஒரு அற்புத வாய்ப்பாக இந்த அறுபதாம் கல்யாணம் அமைகின்றது.

பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்து மகிழும் ஓர் அற்புத நிகழ்ச்சியே இந்த அறுபதாம் கல்யாணம் ஆகும். இந்த மணிவிழா நிகழ்வானது தம்பதியர்களில் ஆண் மகனுக்கு 60 வயது முடிந்து 61வது வயது தொடங்கும் போது நடத்தப்படுவதாகும்.

ஒருவரின் 60வது வயது நிறைவு பெற்று வரும் அடுத்த நாள் அந்த நபரின் பிறந்த தமிழ் மாதம், தேதி, நட்சத்திரம், வருடம் ஆகிய அனைத்தும் நிறைவு பெற்றமையை குறிக்கின்றது.

இந்த அறுபதாம் கல்யாணத்தின் சிறப்பம்சம் என்னவெனில் பெற்றோர்கள் தங்களது புத்திரர்களுக்கு திருமணம் செய்து வைப்பது போல புத்திரர்கள் தங்களை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாகும்.