தமிழ் அரசு கட்சி தனித்து முடிவெடுப்பதே தமிழர்களை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது; இனியாவது மாற்றம் நிகழுமா?: ஆனந்தன் எம்.பி ஆதங்கம்!

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம்
மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற இரண்டு ஜனாதிபதித்
தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இலங்கை தமிழரசுக்
கட்சி மட்டுமே முடிவெடுத்து செயற்பட்டதன் விளைவை இன்று ஒட்டுமொத்த
தமிழ்த் தேசிய இனமும் அனுபவித்து வருகிறது. எனவே இம்முறை நடைபெறவுள்ள
ஜனாதிபதித் தேர்தலிலாவது தமிழரசுக் கட்சி தனிப்பட்ட முடிவை எடுக்காமல்
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினருடன்
கலந்துரையாடி அதில் எட்டப்படும் முடிவுகளுக்கமைய தேர்தலை
முகங்கொடுப்பதற்கான தீர்மானத்திற்கு வரவேண்டும். எனவே மதத் தலைவர்களும்,
துறைசார்ந்த நிபுணர்களும், பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளுக்கு
அழுத்தம் கொடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து அல்லலுறும் தமிழ்த் தேசிய
இனத்தின் நலன் சார்ந்து ஒருமித்த முடிவெடுக்க வலியுறுத்த வேண்டும் என்று
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (28) அன்று செட்டிகுளம் பிரதேசத்தில் கட்சித்
தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றும் பொழுதே அவர்
மேற்கண்ட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் எமது தேசிய இனத்தின்
விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர்
நடைபெற்ற 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் முடிவும், 2015ஆம் ஆண்டு தேர்தலில் மைத்திரியை ஆதரிக்கும் முடிவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான முடிவு. இரண்டு தேர்தல்களிலும்
இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவடையும் தருணத்தில் எத்தகைய நிபந்தனையையும்
விதிக்காமல் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் முடிவு எட்டப்பட்டது.

ஆனால் நாம், நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க வேண்டாம் என்று
தெரிவித்தோம். இருப்பினும் எமது கோரிக்கையை தமிழரசுக் கட்சி உதாசீனம்
செய்தது.