புத்தளத்தில் இராணுவ பஸ் மோதி விபத்து – 7 பேர் படுகாயம்!

புத்தளம்- கறுவலகஸ்வெவ பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 7 ​பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் ,புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்றுடன், இராணுவ பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் , வானில் பயணித்த பெண்களே படுகாயமடைந்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி, இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் சிப்பாய்களுடன் பயணித்த பஸ், முன்னால் பயணித்த குறித்த வானை முந்திச் செல்ல முற்பட்டபோதே, குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதேவேளை விபத்தில் படுகாயமடைந்த இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதியை கைதுசெய்துள்ள கறுவலகஸ்வெவ பொலிஸார் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.