10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்!

2020 ஆம் ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதில் தேர்வுகள் தொடங்கும் தேதிகள், முடிவடையும் தேதிகள் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் எவ்வித மன அழுத்தமும் இன்றி, தேர்வு எழுதுவதற்கு ஆசிரியர்கள் முன்னதாகவே, மாணவர்களை தயார் செய்யும் வகையில், முன்கூட்டியே தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது.

2020 ஆம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆனது மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி, மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4 ம் தேதி தொடங்கி, மார்ச் மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஆனால் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 17 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அதே மே மாதம் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் புதிய தேர்வு அட்டவணைபடி  மார்ச் 27 -ந்தேதி முதல் ஏப்ரல் 13 ந்தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்க உள்ளது. மொழித்தாள் தேர்வுகள் ஒரே தாளாக மாற்றப்பட்டதால் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து புது அட்டவணை வெளியிடபட்டுள்ளது. அதன்படி தமிழ் மார்ச் 27 ஆம் தேதியும், ஆங்கிலம் மார்ச் 31 ஆம் தேதியும், சமூக அறிவியல் ஏப்ரல் 3 ஆம் தேதியும், அறிவியல் ஏப்ரல் 7 ஆம் தேதியும், கணிதம் ஏப்ரல் 13 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.