டோனியின் ஓய்வு விவகாரம் தற்போதைக்கு முற்றுபெறாது..!!

டோனியின் ஓய்வு விவகாரம் தற்போதைக்கு முடிவு பெறாது என்றும், தனது ஆட்டத்தின் மூலம் அவர் பதிலடி கொடுப்பார் என்றும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து, 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் தேர்வு குறித்தும், டோனியின் ஓய்வு குறித்தும் அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் டி20 தொடரில் சேர்க்கப்படாததற்கு அவர்களது துடுப்பாட்ட செயல்பாடு தான் காரணம்.

இதனால் தான் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியவர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு தரப்பட்டது. சம விகிதத்தில் அணி அமைய வேண்டும் என்று கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்து நாடுகளிலும் 9 மற்றும் 10 வது வரிசை வீரர்கள் வரை துடுப்பாட்டம் செய்யும்போது, நாமும் அவ்வாறு ஏன் ஆடக்கூடாது.

எந்த முடிவு எடுத்தாலும் பலமான சரியான அணி அமைய வேண்டும் என்பதே நோக்கமாகும். அடுத்து வர இருக்கும் டி20 உலகக் கிண்ண தொடர் ஒரு மைல்கல் போன்றதாகும். ஒவ்வொரு அணியும் அதற்காக தீவிரமாக தயாராவார்கள். அதேபோல நாமும் சிறந்த அணியை உருவாக்குவோம்.

டோனி இந்திய கிரிக்கெட் மீது அக்கறை கொண்டவர். ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களை உருவாக்கினாலும் 38 வயதான டோனி எப்போதும் விலை மதிப்பற்றவர். அவரது ஓய்வு விவகாரம் தற்போதைக்கு முற்றுப் பெறாதது. விமர்சனங்களுக்கு டோனி தனது ஆட்டம் மூலம் சரியான பதிலடி கொடுப்பவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விளையாட்டில் அனுபவம் முக்கிய பங்கு வகிக்கும். பலமுறை டோனி இதை மைதானத்தில் நிரூபித்து இருக்கிறார். அவர் தொடர்ந்து ஆடும் பட்சத்தில் அணிக்கு விலை மதிப்பற்றவர். ஓய்வு முடிவு தனிப்பட்ட விடயமாகும்’ என தெரிவித்துள்ளார்.