ரசிகர்களுக்கு விஜய் போட்ட அதிரடி கட்டளை!

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவில் வைக்கப்பட்டு இருந்த பேனர், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது விழுந்தது, இதையடுத்து நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலே சுபஸ்ரீ பரிதமாக உயிரிழந்தார். தமிழகத்தில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை தமிழக அரசுக்கு, காவல் துறையினருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் எழுப்பி உள்ளது.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருப்பதாவது, பிகில் பட இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் யாரும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை என்பதை விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். குறிப்பாக வரும் 19 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்வின்போது ரசிகர்கள் யாரும் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார்.