இரண்டு மில்லியன் பணம் கேட்டு தென் ஆப்பிரிக்காவில் தாயின் கைகளில் இருந்து 6 வயது குழந்தை கடத்தி செல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஏஞ்சலின் டி ஜாகர் என்கிற தாய் பள்ளியிலிருந்து தன்னுடைய 6 வயது மகள் ஆமி-லீ டி ஜாகர் மற்றும் மகனை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் குழந்தைகள் அனைவரும் பள்ளியிலிருந்து வெளியில் வந்துகொண்டிருந்தனர். ஆமி, அவருடைய தாயிடம் நின்று கொண்டிருந்த போது கார் ஒன்றில் வந்த நான்கு மர்ம நபர்கள் திடீரென, ஏஞ்சலின் கைகளில் இருந்து அவருடைய குழந்தையை பறித்து சென்றுள்ளனர். அவர் உதவி கேட்டு அந்த இடத்திலேயே கதறி அழ ஆரம்பித்துள்ளார்.
சுற்றுவட்டாரத்தில் எஃப் 1 பவர்போட் கார் பந்தய வீரராக இருக்கும் குழந்தையின் அப்பா வினாண்டிற்கு, கடந்தபட்ட சில நிமிடங்களில் போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது.
அதில், உங்களுடைய மகள் பாதுகாப்பாக வர வேண்டும் என்றால் (தென் ஆப்பிரிக்க மதிப்பில்) இரண்டு மில்லியன் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இந்த சம்பவமானது நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து பொலிஸார் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சம்பவத்தில் அந்த சிறுமி திட்டமிட்டு கடத்தப்பட்டுள்ளார். மற்ற குழந்தைகள் பலரும் அந்த இடத்தில் இருந்த போது, தம்பதியின் மற்றொரு குழந்தையை தூக்கி எறிந்துவிட்டு சிறுமியை மட்டும் பறித்து சென்றுள்ளனர்.
இதன்மூலம் அவர்கள் பல நாட்களாக திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அந்த நான்கு பேரும், ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகில் வாண்டர்பிஜ்பார்க்கில் உள்ள கொல்லேஜ்பார்க் ஆரம்பப் பள்ளிக்கு வெளியே ஒரு டொயோட்டா பார்ச்சூனரில் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது என தெரிவித்துள்ளார்.