நண்பனை கொலை செய்ததற்கு பழிக்கு பழி! ஓட ஓட வெட்டி கொலை!

தமிழகத்தில் நண்பனை கொலை செய்ததற்கு பழிக்குப்பழி வாங்கும் வகையில் பைனான்சியர் ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, புதூர் ராம்வர்மா நகரை சேர்ந்தவர் ராஜா(35). பைனான்சியரான, இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் புதூரில் உள்ள கடை பகுதியில் ராஜா டூவீலரில் சென்ற போது டூவீலர்களில் ஆயுதங்களுடன் வந்த கும்பல், அவரை வழி மறித்து கண்மூடித்தனமாக வெட்டியது.

தப்ப முயன்றவரை கும்பல் ஓட ஓட விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்து தப்பி ஓடியது.

இதனால் இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், அப்பகுதியில் விசாரித்தனர்.

கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கமெராக்களில் பதிவான காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியதால் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே இக்கொலை தொடர்பாக மதுரை, புதூர் ராம்வர்மா நகரைச் சேர்ந்த நிஜாம்முகைதீன், கார்த்திக் (எ) குட்டை கார்த்திக், தவ்பீக், ஹரிகிருஷ்ணன் மற்றும் சிலர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களில் 4 பேரை பொலிசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பொலிசார் இச்சம்பவம் குறித்து கூறுகையில், கொலையான ராஜா, சேவல்களை வளர்த்து சண்டைக்கு விட்டு வந்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு வாடிப்பட்டியில் நடந்த சேவல் சண்டையில் ராஜா தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார்.

அப்போது ராஜா தரப்பினருக்கும், ராம்வர்மா நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

ராஜா உள்ளிட்ட நபர்கள் சேர்ந்து ஸ்ரீதரை கொலை செய்துள்ளனர். இதற்கு பழிக்குப்பழியாக ஸ்ரீதரின் நண்பர் கார்த்திக் (எ) குட்டை கார்த்திக் உள்ளிட்ட சிலர் சேர்ந்து ராஜாவை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.