ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் சி.வி.விக்னேஸ்வரன்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கொழும்பு அரசியல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. அண்மையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை அறிவித்திருந்தது.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவிக்காத நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அந்த கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது ஒரு புறமிருக்க சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைத்தாங்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சில முரண்பட்ட கருத்துக்களை வெளியட்டு வருகின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மை போட்டியிடுமாறு சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்காது போனால் தமது ஆதரவை கோத்தாபய ராஜபக்சவிற்கே வழங்க தீர்மானம் எடுத்துள்ளதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி தேர்தல் குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழு கூடி ஜனாதிபதி தேர்தல் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது.

அத்துடன் கட்சியின் உறுப்பினர்கள், ஆளுநர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் பொது இணக்கப்பாடு எட்டும் தீர்மானம் ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.