22 பேரை சுட்டுக் கொன்றது ஏன்? தாக்குதல்தாரி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

அமெரிக்காவின் எல் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து தாக்குதல்தாரி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கடந்த 3ம் தேதி டெக்சாஸ் மாகாணத்தின் எச் பாசோ நகரில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் சரமாரி தாக்குதலில் ஈடுபட்டான். இத்தாக்குதலில் ஈடுபட்ட 21 வயதான பேட்ரிக் க்ரூசஸ் என்ற இளைஞனை பொலிசார் கைது செய்தனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நபர், பொலிசில் சரணடைந்த நிலையில் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், மெக்சிகர்கள குறிவைத்தே இத்தாக்குதலில் ஈடுபட்டதாக பேட்ரிக் வாக்குமூலம் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இத்தாக்குதலில் 1 ஜேர்மனியர், 8 மெக்சிகோ நாட்டவர், 13 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை தாக்குதலுக்குப் பின் சோதனையின் போது நிறுத்தப்பட்ட ஒரு வாகனத்தில் இருந்து தனது கைகளை உயர்த்திய படி இறங்கிய 21 வயதான பேட்ரிக் , அதிகாரிகளிடம், நான் தான் துப்பாக்கிச் சூடு நடத்தியவன் எனக் கூறி சரணடைந்தார் என்று கைது வாரண்ட் பிரமாணப் பத்திரத்தில் அட்ரியன் கார்சியா என்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரி பேட்ரிக் சமூகவலைதளத்தில் எழுதிய பதிவில் பெரும்பாலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின், இனவெறியை தூண்டும் சொற்களே பிரதிபலித்ததாக சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டது.