காஷ்மீர் பிரச்னை… ட்விட்டரில் மோதிக்கொண்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள்!

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடிக்கு, இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை ரத்து செய்வதாக திங்கட்கிழமையன்று மத்திய அரசு அறிவித்தது.

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் நம் அனைவரையும் போலவே சுதந்திரத்தின் உரிமைகள் காஷ்மீர் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் ஏன் உருவாக்கப்பட்டது? அது ஏன் தூங்குகிறது என்பது தெரியவில்லை’.

‘மனிதாபிமானத்திற்கு எதிராக காஷ்மீரில் நடத்தப்படும் ஆக்கிரமிப்பு மற்றும் குற்றங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இதில் தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும் என பதிவிட்டிருந்தார்’.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிழக்கு தில்லி பாஜக மக்களவை உறுப்பினருமான கெளதம் கம்பீர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ‘ஷாஹித் அஃப்ரிடி சரியாகத் தான் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் மக்களுக்கு எதிரான இந்த மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதல்கள் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியதுதான். இப்பிரச்னையை முன்னெடுத்த அஃப்ரிடி பாராட்டுக்குரியவர்’.

‘ஆனால் இந்த குற்றச்செயல்கள் எல்லாம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறுகிறது என்பதை சுட்டிக்காட்ட தான் மறந்துவிட்டார். ஒன்றும் கவலைப்படாதே, எல்லாம் விரைவில் சரியாகும் மகனே’ என பதிவிட்டுள்ளார்.