உல்லாச வாழ்க்கை! வசமாக சிக்கிய செம்பருத்தி சீரியல் நடிகர்…

பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகர் சைப் அலிகான் மக்களிடம் பணத்தை ஏமாற்றி வசூல் செய்து உல்லாசமாக வாழ்ந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் அடையாள அட்டை அணிந்து இருந்த 2 பேர் சிறுவர், சிறுமிகளின் கல்வி சேவைக்கு என்று கூறி அங்கிருந்த பொதுமக்களிடம் நன்கொடை வசூலிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர் நன்கொடை வசூலில் ஈடுபட்டிருந்த நபர்கள் தங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை கண்டுபிடித்தார்.

பின்னர் அந்த இருவரையும் ரகசியமாக பின்தொடர்ந்த அருண்குமார், இதுபற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நன்கொடை வசூலிப்பில் ஈடுபட்ட 2 மோசடி நபர்களையும் கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், கோடம்பாக்கத்தை சேர்ந்த சைபலிகான் (29) மற்றும் ராயப்பேட்டையை சேர்ந்த கவுதம் (29) என்பதும், தெரியவந்தது.

நண்பர்களான இவர்கள் தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலித்து, அந்த பணத்தில் உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில் பிடிபட்ட சைபலிகான், செம்பருத்தி, பகல்நிலவு போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருப்பதும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தார்கள்.