திருமணம் முடிந்த 20 நாட்களில் காதல் கணவனை உயிருடன் எரித்துக்கொன்ற மனைவி!

விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 20 நாட்களில் காதல் கணவனை மனைவியே உயிருடன் தீ வைத்து எரித்துக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் பகுதியை சேர்ந்த சேதுபதி (24), புதுச்சேரியில் உள்ள பஞ்சர் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த முருகவேணி (19) என்பவரை 20 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

இருவரும் சேர்ந்து ஒரு குடிசையில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென சேதுபதியின் வீடு தீப்பற்றி மளமளவென எரிந்தது.

உள்ளே உறங்கிக்கொண்டிருந்த சேதுபதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வேகமாக தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் காற்று பலமாக வீசியதால் வேகமாக தீ பரவி சேதுபதி பரிதாபமாக உடல்கருகி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது வீடு வெளிப்பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. அதோடு அல்லாமல் அந்த சமயத்தில் முருகவேணி வீட்டின் வெளிப்பகுதியில் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

திருமணம் முடிந்ததிலிருந்தே தம்பதியினருக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்த சேதுபதி, முருகவேணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் மது அருந்திவிட்டு சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த முருகவேணி, நேற்று மது அருந்திவிட்டு சேதுபதி உறங்கிக்கொண்டிருந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளார். கணவரின் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துவிட்டு வீட்டின் வெளிப்புறமாக தாழ்பாளிட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக முருகவேணியை கைது செய்துள்ள பொலிஸார், அவரது தாயிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.