அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு!!

கலிபோர்னியாவில் நடைபெற்ற ஒரு பாரம்பரிய திருவிழாவின்போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்ததோடு, 60 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலை 6 மணியளவில் கலிபோர்னியாவில் நடைபெற்ற Gilroy Garlic Festival என்னும் பாரம்பரிய திருவிழாவின்போது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்த, மக்கள் உயிர் பிழைக்க அலறியபடி ஓட்டம் பிடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரைப் பார்த்ததாக கூறும் ஒருவர், அந்த நபர் ஒரு பொலிஸ் அதிகாரியைப் போல நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

மற்றொருவர் தனது தலைக்கு மேல் ஒரு குண்டு பறந்ததாகவும் தனக்கு பின்னால் ஏராளமானோர் ஒடி வந்ததைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இதுவரை பிடிபடாத நிலையில், என்ன நோக்கத்திற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை.

விசாரணை மேற்கொண்டுள்ள பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.