இன்று இலங்கை – வங்கதேசம் மோதும் போட்டி கொழும்பில்!

இலங்கை – வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் இலங்கை அணி 6-வது இடத்தையும், வங்காளதேச அணி 8-வது இடத்தையும் பெற்றன.

உலக கோப்பைக்கு பிறகு நடக்கும் முதல் ஒரு நாள் தொடர் இது தான். உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

வங்கதேச அணியின் தலைவர் மோர்தசா காயம் காரணமாக இடம் பெறவில்லை.

அவருக்கு பதிலாக தமிம் இக்பால் முதல்முறையாக தலைவர் பொறுப்பை கவனிக்க இருக்கிறார்.

இந்த போட்டி தொடருக்கான இலங்கை அணி இறுதி செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாமுக்கான அணியில் இடம் பிடித்து இருந்த நிரோஷன் டிக்வெல்லா, குணதிலகா, லக்‌ஷன் சண்டகன், லஹிரு மதுஷங்கா, அமிலா அல்போன்சா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

கருணாரத்னே தலைவராக நீடிக்கிறார். மேத்யூஸ், திசரா பெரேரா, குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, அகிலா தனஞ்ஜெயா உள்ளிட்டோரும் அணியில் உள்ளனர்.

வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்துடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் 35 வயதான மலிங்கா ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

மலிங்காவை வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை அணி தீவிரம் காட்டும்.

இலங்கை-வங்காளதேச அணிகள் இதுவரை ஒருநாள் போட்டியில் 45 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 36-ல் இலங்கையும், 7-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்று இருக்கின்றன.