மனைவியின் உடலை ஏந்தியபடியே ஓடிவந்த கணவன்: அதிர்ந்த பொலிஸ்

பிரேசில் நாட்டில் உயிருக்கு போராடிய மனைவியை அவருடைய கணவன் கைகளில் ஏந்தியபடியே மருத்துவமனைக்கு ஓடிவரும் வீடியோ காட்சியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பிரேசில் நாட்டில் ஜாய்ன்வில் நகரில் உள்ள பெதஸ்தா மருத்துவமனையில் கடந்த செவ்வாய்கிழமையன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

நாதன் மார்டின்ஸ் (21) என்கிற இளைஞர் தன்னுடைய மனைவி உயிருக்கு போராடுவதாக கூறிவிட்டு, வேகமாக கைகளில் ஏந்தியபடியே மருத்துவமனைக்குள் ஓடிவந்துள்ளார்.

அவசர சிகிச்சை பிரிவில் மனைவியை அனுமதித்துவிட்டு ஆவணங்களை எடுத்துவருவதாக கூறி வீட்டிற்கு கிளம்பியுள்ளார். இதற்கிடையில் 20 நிமிட போராட்டத்திற்கு பின் அந்த இளம்பெண் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு சென்ற மார்டின்ஸ் மருத்துவமனைக்கு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் மருத்துவமனைக்கு வந்த பொலிஸார் நாதன் தாயிடம் விசாரணை மேற்கொண்ட போது, இறந்த இளம்பெண் காப்ரியாலா (20) என்பது தெரியவந்தது.

செவ்வாய்க்கிழமையன்று நாதன் மற்றும் காப்ரியாலா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென வீட்டின் அறைக்குள் துப்பாக்கி சத்தம் மட்டும் கேட்டிருக்கிறது. அடுத்த சில நிமிடங்களில் நாதன் மற்றும் காப்ரியாலா வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், தலைமறைவாக இருக்கும் நாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.