இந்திய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க ஜம்பவான்..!

இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாராக முன்னாள் தென் ஆப்பிரிக்கா துடுப்பாட்டகாரரும், நட்சத்திர பீல்டருமான ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார்.

இந்திய அணிக்கான தலைமைப் பயிற்சியாளர், பேட்டிங், பீல்டிங், பவுலிங் பயிற்சியாளர் தேர்வுகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஜூலை 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், 49 வயதான உலகின் தலைசிறந்த பீல்டராகக் கொண்டாடப்படும் தென் ஆப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் இந்திய பீல்டிங் பயிற்சியாளராக விண்ணப்பம் செய்துள்ளதாக அவரே உறுதி செய்துள்ளார்.

இது குறித்து ரோட்ஸ் கூறியதாவது, ஆமாம், நான் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக விண்ணப்பித்துள்ளேன். நானும், மனைவியும் இந்த நாட்டை விரும்புகிறோம், இந்தியா ஏற்கனவே எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது, எங்களுக்கு இந்தியாவில் 2 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் அணியின் மும்பை இந்தியன்ஸின் பீல்டிங் பயிற்சியாளராக ஜாண்டி ரோட்ஸ் நீண்ட காலமாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.ஸ்ரீதர் இந்தியாவின் தற்போதைய பீல்டிங் பயிற்சியாளராக உள்ளார், இவரின் ஒப்பந்தம் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் முடியும் வரை 45 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

ஸ்ரீதர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் மீதமுள்ள உதவி ஊழியர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை, ஏனெனில் அவர்களின் விண்ணப்பங்கள் தானாகவே பரிசீலிக்கப்படும்.