தவறு செய்துவிட்டேன்: ஒப்புக்கொண்ட இலங்கை நடுவர்

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டதாக போட்டியின் நடுவர் தர்மசேனா தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில், பென் ஸ்டாக்ஸை அவுட்டாக்குவதற்காக எறியப்பட்ட பந்து அவருடைய மட்டையில் பட்டு பவுண்டரி எல்லைக்கோட்டிற்கு சென்றது.

அந்த சமயத்தில் நடுவராக நின்று கொண்டிருந்த இலங்கை நடுவர் குமார் தர்மசேனா 6 ரன்களை வழங்கினார். இதனால் இரு அணிகளுடன் சமநிலை பெற்று சூப்பர் ஓவர் சுற்றுக்கு சென்றது. அதில் அதிக பவுண்டரிகள் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சர்ச்சைக்குள்ளான அந்த நேரத்தில் பேட்ஸ்மேன்கள் இரண்டாவது ரன்னுக்கு எல்லைக்கோட்டை கடக்காதததால், 5 ரன்கள் மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் முன்னணி நடுவர் சைமன் டஃபெல் உட்பட பிரபலங்கள் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்த நிலையில் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ள தர்மசேனா, டிவி ரீப்ளேக்களில் பார்க்கும் போது தான் என்னுடைய தீர்ப்பில் தவறு ஏற்பட்டதை நான் தெரிந்துகொண்டேன். ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை.

அந்த நேரத்தில் லெக் அம்பயர் (ஈராஸ்மஸ்) மற்றும் மேட்ச் நடுவர்களால் கேட்கப்படும் தகவல் தொடர்பு அமைப்பு மூலம் மற்ற நடுவர்களிடம் கலந்தாலோசித்தேன். அவர்கள் எல்லைக்கோட்டை கடந்ததாக கூறியதால் நானும் 6 ரன்களை வழங்கினேன் என தெரிவித்துள்ளார்.