7 பேர் விடுதலை… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

7 பேர் விடுதலை தீர்மானத்தில் கையெழுத்திட ஆளுநர் முடிவு எடுக்க உத்தரவிடக்கோரி நளினி மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இதுவரை 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தநிலையில், நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், இந்த தீர்மானத்தின் மீது இதுவரை கவர்னர் கையெழுத்திடவில்லை. எனவே, கையெழுத்திட கவர்னருக்கு முடிவு எடுக்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயிர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. அமைச்சரவை தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.