துருக்கியில் இருந்து லண்டன் செல்லவிருந்த விமானத்தில் முஸ்லீம் பயணிகளை பயங்கரவாதிகள் எனக்கூறிய பிரித்தானிய இளம்பெண்களை விமானத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றி நிர்வாகம் நடவடிக்கைக்கு மேற்கொண்டுள்ளது.
தாமஸ் குக் விமானம் துருக்கியின் டாலமன் விமான நிலையத்திலிருந்து லண்டனின் கேட்விக் நோக்கி புறப்பட தயாராக இருந்தது.
அப்போது இரண்டு பிரித்தானிய இளம்பெண்கள், அதில் பயணித்த மூன்று முஸ்லீம் பயணிகளை, பயங்கரவாதிகள் என இனவெறி தாக்குதல் நடத்தினர். அவர்கள் மூன்று பேரையும் விமானத்தை விட்டு வெளியேற்றுமாறு கூச்சலிட ஆரம்பித்தனர்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த சக பயணிகள், அந்த இளம்பெண்களை விமானத்தில் இருந்து வெளியேற்றுமாறு விமான பணியாளர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளம்பெண்கள், நீங்கள் அனைவரும் முட்டாள்கள் எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்துள்ளார்.
இதற்கிடையில் தகவலறிந்து வந்த பொலிஸார் இரண்டு இளம்பெண்களையும் விமானத்தில் இருந்து வெளியேற்றினர். இதனால் விமானம் புறப்படுவதில் 20 நிமிடங்கள் தாமதமானது.
இந்த சிரமத்திற்காக விமான நிர்வாகம் பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.