உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்

கல்முனை வடக்குபிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த திங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகுமாறு அழைப்பாணை கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் மூலம் விடுவிக்கப்பட்டிருந்தது.

கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வணரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை முருகன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்தக்குருக்கள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன் அ.விஜயரெத்தினம் அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவரும் தொழிலதிபருமான கே.லிங்கேஸ்வரனும் உண்ணாவிரதத்தில் குதித்திருந்தனர்.

கடந்த 21ஆம் திகதி பொதுத்தொல்லை ஏற்படுத்தியமை தொடர்பாக மாநகரசபை உறுப்பினர்கள் சந்திரசேகரம் ராஜன், அ.விஜயரெத்னம், விகாராதிபதி ரண்முத்துகல சங்க ரத்னதேரர், கல்முனை க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள் உட்பட நால்வருக்கு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகுமாறு அழைப்பாணை கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் மூலம் விடுவிக்கப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருந்தமையால் நீதிமன்றத்திற்கு செல்லமுடியாமையால் இன்று ஆஜராகி இருந்தனர்.

இதன்போது வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஐ.என். றிஸ்வான் பொலிஸாரிடம் உண்ணாவிரதிகளின் வாக்குமூலத்தை பொலிஸாரிடம் நீதவான் கோரினார் இதன்போது பிரதிவாதிகளிடம் வாக்குமூலம் பெறப்படவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதமிருந்தவர்களிடம் வாக்கு மூலத்தை பெற்றபின் மீண்டும் செப்ரெம்பர் மாதம் 02ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. பாருக், ரீ.மதிவதனன் ஆகிய இரு வழக்கறிஞர்கள் தமிழர் தரப்பு சார்பாக ஆஜராகியுள்ளனர்.

பொலிஸாரே இந்த வழக்கினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.