சச்சின், கங்குலியின் சாதனைகள் தகர்ப்பு!

உலக கோப்பை போட்டியில், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இருக்கும் பரபரப்பை விட அதிக பரபரப்பை கொண்டதாக கருதப்படுவது இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியாகும். இரண்டு நாடுகள் இடையே சரியான நல்லுறவு இல்லாத காரணத்தினால், இரு தரப்பு தொடர்களில் விளையாடாத இந்த இரண்டு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டும் மோதி வருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த போட்டியில் ஆடிய ஷிகர் தவான் காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் நிலையில், அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் களமிறக்கப்பட்டுள்ளார். லோகேஷ் ராகுல், ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்

இந்த ஆட்டம் தொடங்கும்முன்னரே இந்திய வீரர்களுக்கு எச்சரிக்கையாக கூறப்பட்டது, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆமீரின் பந்துவீச்சில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான். அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய லோகேஷ் ராகுல் அவரின் பந்தை நேர்த்தியாக தடுத்து ஆடினார். மறுமுனையில் ஆரம்பம் முதலே ரோகித் சர்மா அடித்து ஆட தொடங்கினார்.

பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே எதுவுமே சாதகமாக இல்லாத சூழ்நிலையில், முகமது ஆமீர் தொடர்ந்து 2 முறை எச்சரிக்கை பகுதியில் கால் வைத்ததால் இரண்டு முறை நடுவரால் எச்சரிக்கை செய்யப்பட்டார். மேலும் ஒருமுறை அவர் எச்சரிக்கை செய்யப்பட்டால் ஆட்டத்தில் தொடர்ந்து பந்துவீசி அனுமதிக்கபட மாட்டார் என்பதால் அவரை நான்கு ஓவருடன் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டது.

அடுத்து வந்த பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்ட ரோஹித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் அடித்தார்கள். அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 34 பந்துகளிலும், நிதானமாக விளையாடிய லோகேஷ் ராகுல் 69 பந்துகளில் அரை சதமடித்தார்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்த நிலையில், 136 ரன்கள் எடுத்திருந்தபோது லோகேஷ் ராகுல் 57 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். உலகக்கோப்பை போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு இந்திய வீரர்கள் 100 ரன்களுக்கு மேல் பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னதாக இந்திய அணியின் சிறப்பான ஆட்டமாக, 1996ஆம் ஆண்டு தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நவ்ஜோத் சிங் சித்து, சச்சின் டெண்டுல்கரும் இணைந்து 90 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனை இன்று தகர்க்கப்பட்டது.

அதேபோல இங்கிலாந்து மண்ணில் அதிக சிக்சர்கள் அடித்து இந்திய வீரர் என்ற சாதனையை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி இடமிருந்து ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் தட்டி பறித்துள்ளார். மேலும் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் 50 க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய சார்பில் சச்சின் டெண்டுல்கர் ஒரு முறையும், ராகுல் டிராவிட் ஒரு முறையும், விராட் கோலி இரண்டு முறையும் எடுத்துள்ளார்கள். அஜிங்கிய ரஹானே ஒருமுறை எடுத்துள்ளார்.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் வேகவேகமாக பந்துவீச்சை தேர்வு செய்தார். அதேபோல இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் பந்துவீச்சை தெரிவு செய்ய விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆட்டத்தினை பேட்டிங்க்கு சாதகமாக இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் மாற்றியிருப்பது ரசிகர்களுக்கு குதூகலத்தை உண்டாக்கியுள்ளது.

சற்றுமுன் வரை இந்திய அணி 30 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 85 பந்துகளில் அதிரடி சதமடித்து அசத்தியுள்ளார்.