குழந்தையை வீசிச்சென்ற பெண்: காட்டிக்கொடுத்த CCTV கெமரா!

தாய்லாந்தில் தனது குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச்சென்ற ஒரு பெண், CCTV கெமராவால் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Waraporn (29), என்ற பெண்தான், பிறந்த குழந்தையை தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றுள்ளார்.

CCTV கெமராவில் பதிவாகியுள்ள காட்சிகளில் தனது மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார வைத்திருக்கும் ஒரு குழந்தையுடன் வரும் Waraporn, வண்டியை குப்பைத் தொட்டி ஒன்றின் அருகே நிறுத்திவிட்டு கீழே இறங்குவதைக் காணமுடிகிறது.

கையில் ஒரு கருப்பு நிற பையுடன் செல்லும் அவர், குப்பைத்தொட்டிக்கு பின்னால் அந்த பையை வைத்து விட்டு செல்கிறார்.

அந்த குழந்தை சுமார் நான்கு மணி நேரம் வெயிலிலேயே கிடந்திருக்கிறது. பின்னர் குப்பைகளை சேகரிக்கும் நபர் அங்கு வந்த பின்னரே, குழந்தையைக் கண்டுபிடித்திருக்கிறார்.

பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, பொலிசார் வந்து அங்கிருந்த CCTV கெமராவை சோதிக்க, Waraporn குழந்தையை கைவிட்டு செல்வது தெரியவந்திருக்கிறது.

அவரைக் கண்டு பிடித்து அவரது வீட்டுக்கு செல்லும்போதுதான் Warapornம் மிகுந்த உதிரப்போக்கு ஏற்பட்டு துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்கள் பொலிசார்.

உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்த பொலிசார் விசாரித்தபோது, தனக்கு ஏற்கனவே நான்கு குழந்தைகள் இருப்பதாகவும், ஐந்தாவதை வளர்க்க வசதியில்லை என்பதாலேயே அதை குப்பைத்தொட்டியில் போட்டதாக தெரிவித்துள்ளார் Waraporn.

கழிவறையில் அவனை பிரசவித்தேன், நானே தொப்புள் கொடியை வெட்டி அவனைக் கொண்டு குப்பையோடு குப்பையாக போட்டு விட்டு வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் Waraporn.

பொலிஸ் விசாரணையில், ஏற்கனவே அவர், முன்னொருமுறை இன்னொரு குழந்தையையும் கைவிட்டு சென்றதற்காக குற்றம் சாட்டப்பட்டது தெரியவந்துள்ளது.