பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு திடீர் அழைப்பு.!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்ற பின்னர், நாட்டில் அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி திட்டங்களை வரையறுக்கும் மத்திய திட்ட குழு கலைக்கப்பட்டு, அதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்ற பெயரில் புதிய திட்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நிதி ஆயோக் அமைப்பின் ஐந்தாவது ஆட்சி மாற்ற குழு கூட்டம் டெல்லியில் வருகிற 15-ஆம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். இக் கூட்டத்தில் மாநில அரசுகளின் கருத்துக்கள், கொள்கை முடிவுகள், வளர்ச்சி திட்டங்கள், விவசாயம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.