காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்த ராகுல் காந்தியின் இல்லத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் விரைந்துள்ளனர்.
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி முடிவு எடுத்தார்.
ஆனால் ராகுலின் முடிவை காங்கிரஸ் காரிய கமிட்டி நிராகரித்தது. எனினும், ராகுல்காந்தி ராஜினாமா செய்யும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என்றும், தகுதியான தலைவர்களை தேர்ந்தெடுங்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் கடைசி கட்ட முயற்சியாக ராகுல் காந்தியை சந்தித்து, பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று வலியுறுத்த, அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் ரந்தீப் சுர்ஜிவாலா, அகமது பட்டேல் சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், ராகுலின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.
இதனால், காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் நீடிப்பாரா, விலகுவாரா என்பது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என, ராகுல்காந்தியை, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
ராகுல்காந்தியிடம், தொலைபேசி வாயிலாக இன்று காலை பேசிய ஸ்டாலின், தேர்தலில் தோற்றாலும் மக்கள் மனதில் ராகுல்காந்தி வெற்றி பெற்று விட்டதாக கூறினார்.
எனவே, காங்கிரஸ் தலைவர் பதவியை தொடர வேண்டும் என்றும் ராகுலிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.