மக்களவை தேர்தல் பிரசாரத்தின் போதும், தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பும் வைகோவை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டன.
வைகோ எந்த கட்சிக்கு செல்கிறாரோ, யாருக்கெல்லாம் ஆதரவு தெரிவிக்கிறாரோ அவர்கள் தோல்வியடைந்து விடுவதாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இது ம.தி.மு.க.வினருக்கு கடும் மனவேதனை அளித்தது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ம.தி.மு.க.வினர் ‘வைகோவின் ராசி எப்புடி?’ வாசகத்தோடு கூடிய சுவரொட்டிகளை மதுரையில் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர்.
அந்த சுவரொட்டியில் வைகோவின் படத்துடன் கருணாநிதி, ஸ்டாலின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
மேலும் அதில் “தமிழகம் திராவிட இயக்கத்தின் கோட்டை. கலைஞரின் தம்பிக்கு ராசி முக்கியமில்லை. கொள்கையும், வெற்றியும் தான் முக்கியம்” என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த சுவரொட்டி மூலம் வைகோவை தேர்தல் ராசியில்லாதவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு தாங்கள் பதிலடி கொடுத்துள்ளதாக ம.தி.மு.க கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த மகிழ்ச்சியும் வெகு நேரம் நீடிக்கவில்லை. அடுத்து வைகோவும், ராகுல் காந்தியும் இருக்கும் புகைப்படத்தை நெட்டிசன்கள் வெளியிட்டுள்ளனர்.
அதில் இந்த முறை வைகோவின் ராசி ராகுலை காவு வாங்கி விட்டது என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் போட்டு வைகோவை மீண்டும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர்.