சமையலறைக் கழிவுகளை அகற்ற!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள வீடுகளில் சேரும் சமையலறை கழிவுகளை அகற்றும் புதிய நடைமுறை ஒன்றினை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மாநகர முதல்வர் இ. ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சமையலறை கழிவுகளை அகற்றும் வாகனம் விசேட ஒலியினை எழுப்பியவாறு அதிகாலை 5 மணி முதல் மாநகர சபை எல்லைக்குள் வலம் வரும். அதன் போது குடியிருப்பாளர்கள் தமது வீட்டு சமையலறை கழிவுகளை மாத்திரம் அதன் மூலம் அகற்றலாம்.

சமையலறை கழிவுகளை ஊழியர்களிடம் கொடுக்கும் போது அதனுள் பிளாஸ்ரிக் , கண்ணாடி போன்ற வேற கழிவு பொருட்களை கொடுக்க வேண்டாம். சமையலறை கழிவுகளை மாத்திரம் போடுங்கள். வேறு கழிவுகளை போட்டால் , உரியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டப்பணமும் விதிக்கப்படும்.

ஏனைய கழிவுகளை இதுவரை நடைமுறையில் உள்ள கழிவகற்றல் பொறிமுறை ஊடாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பசுமையான மாநகரை உருவாக்க அனைத்து தரப்பு ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம் என முதல்வர் மேலும் தெரிவித்தார்.