சிறுவனால் சிக்கிய இளம்பெண்!

கேரளாவில் படுக்கையில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் இதில் அதிரடி திருப்பமாக சிறுவனின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடுபுழாவை சேர்ந்தவர் அர்ச்சனா. இவருக்கு ஏழு மற்றும் மூன்றரை வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

அர்ச்சனாவின் கணவர் இறந்துவிட்ட நிலையில் தனது உறவினர் அருண் ஆனந்த் என்பவருடன் அவர் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் அர்ச்சனாவும் ஆனந்து ஹொட்டலில் சாப்பிட சென்ற நிலையில் தனது இரு மகன்களையும் வீட்டில் பூட்டிவைத்து சென்றனர்.

திரும்பி வந்த போது இரு சகோதரர்களும் உறங்கிவிட்ட சூழலில் மூன்றரை வயது சிறுவன் படுக்கையில் சிறுநீர் கழித்திருந்தான்.

இதை பார்த்து கோபமடைந்த அருண் அவனை ஏன் கழிவறைக்கு அழைத்துச் செல்லவில்லை எனக் கூறி சிறுவனின் அண்ணனைத் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சிறுவன் பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தான்.

இந்த வழக்கில் அருண் கைது செய்யப்பட்ட நிலையில் அதிரடி திருப்பமாக தற்போது அர்ச்சனாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது கைதுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அவரது இரண்டாவது மகனான மூன்றரை வயது சிறுவனின் வாக்குமூலம்.

தனது அண்ணனை பப்பி என அழைக்கும் அந்தச் சிறுவன் பொலிசில் அளித்த வாக்குமூலத்தில், பப்பியை அப்பா தலையில் அடித்த பின்னர் காலைப் பிடித்து கீழே எறிந்ததோடு தலையை சுவற்றில் முட்டினார்.

கீழே விழுந்த பப்பி எந்திரிக்கவில்லை. வீடு முழுவதும் ரத்தம் சிந்தியிருந்தது. பிறகு பப்பியை அம்மாவும், அப்பாவும் காரில் எங்கோ கொண்டு சென்றனர் என கூறியுள்ளான்.

இதன் பின்னர் இருவரும் சிறுவனை தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையிலேயே அவன் உயிரிழந்துள்ளான்.

இதையடுத்து அருணை தப்ப வைப்பதற்காக உண்மையை மறைத்த குற்றத்துக்கு அர்ச்சனாவை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.