இலங்கையில் தொடர் குண்டு தாக்குதல் நடத்தியவர்கள் வெளிநாட்டவர்களா?

கொழும்பு உட்பட நாட்டின் சில இடங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த வந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களில் பலர் வெளிநாட்டவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு நாடுகளை சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

நீர்கொழும்பு தேவாலயம் மற்றும் செங்கீ-ரீலா ஹொட்டல் ஆகியவற்றுக்கு குண்டுகளை கொண்டு வந்தவர்கள் தொடர்பான காட்சிகள் அங்குள்ள பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து அவர்களின் தலைகள் மூலம் அந்த நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கீ-ரீலா ஹொட்டலில் தாக்குதல் நடத்தியது இலங்கையை சேர்ந்த அடிப்படைவாத அமைப்பொன்றின் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 32 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 218 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சிசிடிவி காணொளியில் தெரிந்த குண்டுதாரி

நீர்கொழும்பு, கட்டுபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு செல்லும் தாக்குதல்தாரியின காணொளி தற்போது வெளியாகி உள்ளது.

தோளில் சுமந்து செல்லும் பையில் வெடிகுண்டுகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணொளி தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்கொழும்பு தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 90 பேர் வரையில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட நபரின் தகவல் வெளியாகியுள்ளது

இலங்கையில் இன்று தொடர் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுவரும் இந்நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என தனது பெயரை அடையாளப்படுத்திய சந்தேக நபரொருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றிணை கொண்டே இந்த தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் எனவும், அதனை தற்கொலை தாரியொருவர் கொண்டுவந்து தாக்கியிருக்கலாம் எனவும் பாதுகாப்பு தரப்பில் இருந்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலயத்திற்குள் வந்த நபர் ஒருவரை சந்தேகம் கொண்ட தேவாலய ஊழியர்கள் அவரை வெளியேற்றிய நிலையிலேயே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது!

கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim என்ற நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இன்று காலை முதல் நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 207 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன், 400 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஏழு பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.