தூக்கில் தொங்கிய பெண் போலீஸ்! அதிர்ச்சியடைந்த கணவன்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்து உள்ள குஞ்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், முத்துவாளன். இவர் அப்பகுதியில் ஆட்டோ டிரைவராக பணியாற்றிவந்துள்ளார். முத்துவாளனின் மனைவி அமுதா என்பவர் உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் தற்போது பணி மாற்றம் செய்யப்பட்டு உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். முத்துவாளன்-அமுதாவுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அமுதா, வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை முத்துவாளன் எழுந்து பார்த்தபோது, மனைவி அமுதா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அமுதாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.