ராதாரவியை லெப்ட், ரைட் வாங்கிய நயன்தாரா!

மார்ச் 23 ஆம் தேதி சென்னையில் “கொலையுதிர் காலம்” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மற்றும் பிரதாப்போத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த விழாவில் பேசிய பழம்பெரும் நடிகர் ராதா ரவி, நயன்தாரா குறித்து ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டார். இது இணையத்தில் வைரலாகி தற்போது சர்ச்சையை கிளப்பியது.

இதனை தொடர்ந்து அவரை திமுக தற்காலிகமாக நீக்கம் செய்தது. ஆனால், ராதாரவி ‘நான் முழுமையாக கட்சியை விட்டு விலகிக் கொள்கிறேன்’ என விலகிவிட்டார். இந்நிலையில் பலரும் நயன்தாராவிற்கு ஆதரவாக களமிறங்கினர்.

ராதாரவியின் இந்த பேச்சை கண்டிக்கும் விதத்தில் நயன்தாரா, “நான் பொதுவாக அறிக்கைகள் வெளியிடுவதில்லை. பெண்களுக்கு எதிரான ஆண்களின் தவறான கருத்துகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கருத்துக்களால் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

நடிகர் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் தான் பிறந்தவர் என்பதை ராதாரவி உள்ளிட்ட அவரைப் போன்றவர்கள் மறக்க வேண்டாம். சினிமா துறையில் மூத்த நடிகரான அவர் மற்ற இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டுபவராக திகழ வேண்டும்.

சரியான பட வாய்ப்பு இல்லாததால், தன் மீதான கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று கீழ்த்தரமாக பேசி பிரபலமடைய முயற்சிக்கிறார் ராதாரவி. இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால், அவருடைய கீழ்த்தரமான பேச்சுக்கு அங்கிருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து கேட்பது தான். தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அவரை விசாரிக்க குழு அமைக்க வேண்டும்.

ராதாரவி போன்ற பெண்களுக்கு எதிராக பேசுபவர்களை பொதுமக்களும், ரசிகர்களும் ஆதரிக்கக் கூடாது என்பதே எனது கோரிக்கை. அவரது இத்தகைய கேவலமான பேச்சுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது திறமைக்கு ஏற்ற வேலையை கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறார். எனது ரசிகர்களுக்காக நான் என்னால் முடிந்த வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். இனியும் நடிப்பேன்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி விசாகா வழிகாட்டு குழு அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்பதே எனது பணிவான கடைசி கேள்வி.

எனக்கு துணையாக நின்ற, நிற்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.