பெண் காவலர் தற்கொலை: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்

திருச்சியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் கிராப்பட்டி பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியவர் ராஜலட்சுமி (25). காவலர் குடியிருப்பில் வசித்து வந்த இவரும், முதலாம் எண் பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வந்த சிவக்குமாரும் காதலித்து வந்துள்ளனர். மேலும்  இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததால்,  கர்ப்பிணியான ராஜலட்சுமி, சிவக்குமாரை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தியுள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு சிவக்குமாரின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ராஜலட்சுமி மனக்கவலையில் இருந்த நிலையில், இன்று காலை அவர் பணிக்கு வராததால் சக காவலர்கள் அவர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டியிருந்ததால், சந்தேகமடைந்த தோழிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ராஜலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காதலன் சிவக்குமாரின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் மனஉளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜலட்சுமி இறந்த சோகத்தில் இருந்த காதலன் சிவக்குமாரும், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.