ஒரே ஒரு பெண்ணிற்காக 10 மணி நேரம் திறந்திருக்கும் வாக்குச்சாவடி!

அருணாச்சலப்பிரதேசத்தில் சட்டப் பேரவை மற்றும் மக்களவைக்கு ஏப்ரல் 11-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து வாக்குச்சாவடிகள் அமைத்தல் போன்ற தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் செயல்பட்டுவருகிறது.

இந்நிலையில், அருணாச்சலப்பிரதேசம் -சீன எல்லையில் உள்ள மலோகம் கிராமத்தில் ஒரே ஒரு பெண்ணுக்காக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் ஒரு சில குடும்பங்களே வசித்துவருகின்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள் அனைவரும் வேறு பொதுவான வாக்குச்சாவடியில் தங்களது பெயரை பதிவு செய்த நிலையில், ஜனில்-தயாங் என்ற தம்பதி மட்டும் பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் 2014ஆம் ஆண்டு தேர்தலில் இவர்கள் இருவருக்கு மட்டும் தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது கணவர் ஜனில் தனது பெயரை வேறு வாக்குச்சாவடிக்கு மாற்றிவிட்டார். ஆனால், அவரின் மனைவி தயாங் மாற்றவில்லை என்பதால் அவருக்காக மட்டும் வாக்குச்சாவடி அமைக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் அதிகாரி கூறுகையில், தயாங் என்ற ஒரு பெண்ணின் ஓட்டுக்காக நாங்கள் வாக்குச்சாவடி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அவர் எப்போது வந்து ஓட்டுப்போடுவார் என்று கூற முடியாது என்பதால், நாங்கள் அவரை வற்புறுத்தவும் உரிமை இல்லை. எனவே நாங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அவருக்காக காத்திருப்போம்’ என தெரிவித்துள்ளார்.