துப்பாக்கிச்சூட்டில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை? பெயர்களும், புகைப்படமும் வெளியானது

நியூசிலாந்து மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளதோடு அவர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்தின் Christchurch நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு மசூதிகளில் நுழைந்த மர்மநபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் 50 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரெண்டன் டாரன்ட்(28) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து 9 இந்தியர்கள் மாயமானதாக இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது. ஆனால் இதனை அதிகாரப்பூர்வமாக தூதரகம் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் நேற்று உறுதி செய்தது.

இது தொடர்பாக இந்திய தூதரக டுவிட்டர் பக்கத்தில், துப்பாக்கிச்சூட்டில் 5 இந்தியர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை மிக கனத்த இதயத்துடன் பகிர்கிறோம் என பதிவிடப்பட்டுள்ளது.

மெகபூப் கோகர், ரமீஷ் ஓரா, ஆசீப் ஓரா, அன்சி அலிபாவா மற்றும் ஒயாசிர் காதிர் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனிடையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு விரைந்து விசா வழங்கும்படி நியூசிலாந்து குடியுரிமை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.