பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தினகரன் இன்று சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. டிடிவி தினகரனின் அமமுக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரன் இன்று பெங்களூரு சென்று, பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடுவது குறித்தும், வேட்பாளர்கள் விவரம் குறித்தும் அவரிடம் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அப்போது கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி உடன் இருந்தார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின் மாபெரும் மாற்றம் வரும் என்றும் அப்போது பொள்ளாச்சி விவகாரம் குறித்த உண்மைகள் வெளிவரும் என்றும் கூறினார்.
இதேபோல் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள இளவரசியை அவரது மகன் விவேக், அவரது மனைவி மற்றும் வெங்கடேஷ் மனைவி, உறவினர்கள் சந்தித்து பேசினார்கள்.