பிரிகேடியர் பிரியங்கவுக்கு இராஜதந்திர விலக்குரிமை இல்லை!

புலம்பெயர் தமிழர்களை நோக்கி, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கழுத்தை அறுத்து விடுவது போன்று சைகை காண்பித்த, செயலுக்கு இராஜதந்திர விலக்குரிமை இல்லை என்று பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிவான் இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின் பணியை உள்ளடக்கியே இராஜதந்திர விலக்குரிமை உள்ளது. ஆனால், கழுத்தை அறுப்பது போன்று எச்சரிப்பது, அவரது பணியுடன் தொடர்புடைய விடயம் அல்ல.

எனவே, அவரது இந்தச் செயல் இராஜதந்திர விலக்குரிமைக்கு உட்பட்டது அல்ல.” என்றும் நீதிவான் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை மார்ச் 15ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை குற்றவாளியாக நீதிமன்றம் அடையாளப்படுத்தி, அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.

எனினும், சம்பவம் நடந்த போது அவர் இராஜதந்திர விலக்குரிமையை பெற்றிருந்தார் என்று, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.