கிம் ஜாங் உன் ஆட்சியின் மறுபக்கம்!

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமக்கு எதிராக செயல்பட்டதாக கூறி இதுவரை 421 அதிகாரிகளை படுகொலை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவின் தலைமை பொறுப்பை கடந்த 2011 ஆம் ஆண்டு கிம் ஜாங் உன் ஏற்றுக்கொண்டார்.

அப்போது முதல் இதுவரை சுமார் 421 அதிகாரிகள், அவரது உறவினர்கள் உள்ளிட்டவர்களை படுகொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் அனைவரையும் கொடூரமாக சித்திரவதைக்கு பின்னரே படுகொலை செய்துள்ளார். பலரை உயிருடன் நெருப்பு வைத்து கொளுத்தியுள்ளார். பலர் மிருகங்களுக்கு உணவாகியுள்ளனர்.

சிலர் பொதுவெளியில் நிர்வாணமாக தூக்கு தண்டனைக்கு உள்ளாகியுள்ளனர். விமானங்களை தாக்க பயன்படுத்தும் சக்திவாய்ந்த துப்பாக்கிகளுக்கும் பலர் இரையாகியுள்ளனர்.

சில அதிகாரிகளின் மொத்த குடும்பத்தையே மரண தண்டனைக்கு உள்ளாக்கியுள்ளார்.

பலர் தற்போதும் கடுமையான சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். பலர் குடியிருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போயுள்ளனர்.

மட்டுமின்றி 2013 ஆம் ஆண்டு கிம் ஜாங் -ன் மாமாவான ஜங் சாங் தாக் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

சகோதரரான ஜாங் நாம் 2017 ஆம் ஆண்டு மலேசிய விமான நிலையத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்த தகவல்களை எல்லாம், வடகொரியாவில் இருந்து வெளியேறிய 14 உயர்மட்ட குழு உறுப்பினர்கள், 6 அரசு அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலமாக அளித்தவை.

வடகொரியாவின் வளங்களை வெளிநாடுகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் விற்றதாக கூறியே அவரது மாமாவான ஜங் சாங் தாக் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்டார்.

மேலும், குறித்த தகவல்கள் உள்ளடக்கிய புதிய தொகுப்பில், மாயமான 50 அதிகாரிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளை கடந்த வாரம் வாஷிங்டனில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் விவாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.