சுவிட்சர்லாந்தில் சட்டவிரோதமாக போதை மருந்து வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இளைஞர் காவல் நிலையத்தில் மரணமடைந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 20 வயது இளைஞர் ஒருவரை பொலிசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
விசாரணையின்போது குறித்த இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.
அந்த இளைஞர் கைது செய்யப்படும்போது அவரிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி கொள்ளையிட்ட பொருட்கள் பலவும் அந்த இளைஞரின் வசம் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞரை மருத்துவர் ஒருவர் பரிசோதிக்க பொலிசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
அதில் அவருக்கு எவ்வித பிரச்னையும் இல்லை எனவும் கைது செய்யப்பட்ட இளைஞரை காவல் நிலையத்தில் தங்க வைக்கலாம் என அறிக்கை அளித்துள்ளார்.
மட்டுமின்றி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த இளைஞரை கண்காணிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் டிசம்பர் 26 ஆம் திகதி கைதான அந்த இளைஞர் காவல் நிலையத்தில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவரும் அதிகாரிகள், குறித்த இளைஞரை பரிசோதனை செய்த மருத்துவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.