ஒரத்தநாடு அருகே காவராப்பட்டு தெற்கு தெருவை சேர்ந்தவர் சிகாமணி (வயது 40). இவருக்கும், ஒக்கநாடு மேலையூரை சேர்ந்த சுதாமணி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
சிகாமணி அடிக்கடி வெளிநாடு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் மனைவியை வரதட்சணை கேட்டு சிகாமணி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறுகிறனர்.
இதனால் அவர் கோவம் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து சுதாமணி தந்தை தனது மகளை கணவருடன் சேர்த்து வாழ வைக்க எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிகாமணி மனைவி வீட்டாருக்கு தெரியாமல் ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த சென்னையில் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்துவரும் நதியா என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையறிந்த சுதாமணி அதிர்ச்சியடைந்து இதுபற்றி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் காவல் அதிகாரி ஜெயா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிகாமணி, அவரது 2-வது மனைவி நதியா ஆகியோரை தேடி வருகின்றார்.






