யூபர் ட்ரைவரை துண்டுதுண்டாக நறுக்கி சாக்கடையில் வீசிய லிவிங் டூ கெதர் ஜோடி!

டெல்லியில் யூபர் டிரைவரை துண்டுதுண்டுகளாக நறுக்கி சாக்கடையில் வீசியெறிந்து லிவிங் டூ கெதர் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் ஷகார்பூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்த், யூபர் கார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கடந்த 29ம் தேதி முதல் வீடு திரும்பவில்லை எனவும், செல்போன் ஆப் செய்யப்பட்டிருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை என அவருடைய மனைவி ஆர்த்தி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்த ஆரம்பித்தனர். அவருடைய ஜிபிஎஸ் கருவியை வைத்து ஆய்வு மேற்கொண்ட போது கடைசியாக மதன்கிரியில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் கபாசேரா பார்டருக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அங்கு சென்றடைந்ததும், காரின் ஜிபிஎஸ் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அபபகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்ய ஆரம்பித்தனர்.

அப்போது மெகருலி, குருகிராம் இடையே கோவிந்தின் கார் மற்றும் மொபைலுடன் ஒரு ஜோடி சென்றுகொண்டிருப்பதை பார்த்த பொலிஸார், அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த பரகத் அலி (34) மெகருலி-குருகுரம் சாலையின் கிராமப்புற பகுதிக்கு அருகே சொந்தமாக ஒரு மருத்துவமனை திறக்க திட்டமிருந்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் தன்னுடைய வேலையை இழந்து கடனாளியாக மாறியிருக்கிறார். இவர் மீது ஏற்கனவே ஒரு கற்பழிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது.

திருமணமான சீமா சர்மா (30) கணவனை பிரிந்து, பரகத் அலியுடன் வசித்து வருகிறார்.

சம்பவம் நடைபெற்ற அன்று முன்பதிவு செய்து காரை வரவழைத்துள்ளனர். அதன்படி இடத்திற்கு சென்றடைந்த கோவிந்திற்கு மயக்கமருந்து கலந்த டீ மற்றும் பிஸ்கட் கொடுத்துள்ளனர்.

அதனை சாப்பிட்டதும் மயக்கமடைந்த அவருடைய கழுத்தை கயிற்றால் நெரித்து கொன்றுவிட்டு, காரை எடுத்து சென்றுள்ளனர்.

காரை மொராதாபாத்தில் Dalpatpura பகுதியில் உள்ள கோயிலுக்கு பின்புறம் மறைத்து விட்டு வீடு திரும்பியிருக்கின்றனர்.

அடையாளம் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக கோவிந்தின் உடலை துண்டுகளாக நறுக்கி ஒரு பையில் அடைத்துள்ளனர். அதனை எடுத்துக்கொண்டு கிரேட்டர் நொய்டாவிற்கு அருகே உள்ள ஒரு கால்வாயில் வீசியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆர்த்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.