யாழ்ப்பாணத்தில் இளைஞர்களிடம் நுட்பமாக பணம் பறிக்கும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளன. குறிப்பாக வங்கிகளில் வேலை பெற்றுத் தருவதாக இந்த மோசடி இடம்பெறுகிறது. எனினும் பெரியளவில் பணத்தை கோராமல் குறுகிய தொகையை அவர்கள் கோருவதால் இந்தச் சம்பவங்கள் வெளியே வருவதில்லை.
இந்த வாரம் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு தொலைபேசி ஊடாக அழைத்த ஒருவர், அங்கு க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடித்து பல்கலைக்கழக அனுமதிக்காக உள்ளவர்கள் இருந்தால் வங்கியில் வேலைவாய்ப்பு உள்ளது, யாழ்ப்பாணத்துக்கு நேரில் வந்து தொடர்புகொள்ளலாம் எனக்கூறி கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை வழங்கிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார்.
இந்த தொலைபேசி அழைப்பு வந்த போது, பாடசாலை அதிபர் அலுவலகத்தில் இருக்கவில்லை. அதனால் அடுத்த நிலை அலுவலகரே இந்தத் தகவலைப் பெற்று அங்குள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருந்த மாணவி ஒருவர் அவருடன் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர் முதலில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள வங்கிக் கிளைக்கு வருமாறு கூறியுள்ளார்.
பின்னர் வங்கியின் தலைமையகத்துக்கு வருமாறு குறிப்பிட்டுள்ளார். அந்த வங்கிக்கு யாழ்ப்பாணத்தில் எங்கு தலைமையகம் உண்டு எனக் கேட்ட போது, அந்த மாணவியை கோப்பாய்க்கு வருமாறு கூறியுள்ளார்.
பின்னர் மாணவிக்கு மீண்டும் அழைப்பை எடுத்த அந்த நபர், நவீன வசதிகள் கொண்ட வர்த்தக நிலையத்திற்கு சென்று 5 ஆயிரம் ரூபா ‘ஈசிகாஸ்’ செலுத்திவிடுமாறும் அதன் பின்னர் தொலைபேசி அழைப்பு வரும் போது வருமாறும் கூறியுள்ளார்.
அதனை நம்பி அந்த மாணவியும் பணத்தைச் செலுத்தத் தயாராகிய போது, அவரின் சகோதரனை சந்திக்க நேரிட்டது.
அவரிடம் அந்த மாணவி நடந்தவற்றைக் கூறியுள்ளார். அந்த தொலைபேசி இலக்கத்தை வாங்கி சகோதரன் பல தடவைகள் அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். எனினும் அந்த மோசடி நபர் அழைப்புக்கு பதிலளிக்க வில்லை.
மாணவி பணம் செலுத்தச் சென்ற போது, சகோதரனைச் சந்திக்க நேரிட்டதால் பண மோசடியிலிருந்து தப்பித்துக் கொண்டார்.
இதேவேளை பாடசாலை நிர்வாகத்தினரால் குறித்த வங்கிக்கும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.