ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், மகாராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினர் அரண்மனையை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் பெரும்பாலான மக்கள் வெளியேறுவதற்கு அதிக அளவில் வாக்கு அளித்ததால், வெளியேறுவதற்கு தேவையான முயற்சிகளை பிரதமர் தெரேசா மே மேற்கொண்டு வருகிறார்.
ஆனால், பிரித்தானியாவுக்கு இது பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.
இந்நிலையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேற மார்ச் 29-ஆம் திகதியோடு காலக்கெடு முடிவடைகிறது.
இதனால் பிரதமர் தெரேசா மே அதற்கான செயல்திட்டத்தை தயாரித்துள்ளார். ஆனால் அது குறித்து அவரது கட்சி எம்பிக்கள் அதிருப்தி தெரிவித்து, எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர்.
இதையடுத்து இந்த எதிர்ப்பு போராட்டமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்று போராட்டம் வெடித்தால் எலிசபெத் ராணி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமையாகும்.
இதனால் பக்கிங்காம் அரண்மனையில் உள்ள ராணி எலிசபெத் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே நடந்த பனிப்போர் காலத்திலும், பிரித்தானியா மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்த முற்பட்ட போதும் அரச குடும்பத்தினர் அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டு லண்டன் நகருக்கு வெளிப் பகுதியில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






