ஒன்பது வருடங்களுக்கு பிறகு சாதனை நிகழ்த்திய இந்திய அணி!

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டி இன்று மவுன மங்குனி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

49 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 244 ரன்கள் என்ற இலக்கை நியுசிலாந்து அணி நிர்ணயித்தது. அதிகபட்சமாக அந்த அணியில் நிலைத்து நின்று ஆடிய ரோஸ் டெய்லர் 93 ரன்கள், டாம் லதாம் 51 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் குமார், ஹர்டிக் பாண்டியா, சாகல் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய இந்திய அணியினர் தவான் 28 ரன்கள், ரோஹித் 62 ரன்கள், கோலி 60 ரன்கள், ராயுடு 40 ரன்கள், கார்த்திக் 38 ரன்கள் என அனைவரின் பங்களிப்பில் இந்திய அணி எளிதாக 43 ஆவது ஓவரிலேயே வெற்றியை பெற்றது.

இந்தியாவுக்கு எதிராக கடந்த மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக நியூசிலாந்து அணி ஆல் அவுட் ஆகியுள்ளது. 9 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரில் நியூசிலாந்து இவ்வாறு தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ஆல் அவுட் ஆகி உள்ளது. மேலும் 2016ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் நியூசிலாந்து 3 போட்டிகளில் தொடர்ச்சியாக ஆல் அவுட் ஆகி உள்ளது.

இந்நிலையில் தற்போது வலுவாக உள்ள இந்திய அணியின் பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு தடுமாறியுள்ளது. சொந்த மண்ணிலேயே ஒரு அணியை வீழ்த்துவது என்பது கடினமான நிலை என்ற நிலையில் இந்திய பந்து வீச்சு கூட்டணியின் சாதனையில் இது ஒரு மைல்கல்லாகும்.