இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான மூன்று 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆனது நாளை தொடங்க இருக்கும் நிலையில், இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக இந்திய அணியிலிருந்து கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா அணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
அண்மையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு தனியார் தொலைக்காட்சி நடத்திய கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் விமர்சனத்துக்கு உள்ளானார்கள். இதனையடுத்து அவர்கள் குறைந்தபட்சம் இரண்டு போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் பரிந்துரை செய்திருந்தார்.
இந்நிலையில்நாளை தொடங்க இருக்கும் தொடரில் கேஎல் ராகுல், ஹர்டிக் பாண்டியா பங்கேற்க மாட்டார்கள் எனவும் மேலும் விசாரணை நடத்திய பிறகு அவர்களுக்கான தண்டனை விவரம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நாடு திரும்புவார்கள் என கருதப்படுகிறது.
ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் ரிசர்வ் வீரராக தான் உள்ளார். ஆனால் ஹர்டிக் பாண்டியா வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்பதால் அவருடைய பங்கு முக்கியமாக இருக்கும் அவரை நீக்கியுள்ளது அணியில் பின்னடைவாக கருதப்படுகிறது.
இது குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி நாளைய போட்டிக்கான அணித்தேர்வில் குழப்பம் இருப்பதை ஒப்புக்கொண்டார். நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பிறகே அணித்தேர்வு குறித்து முடிவு எடுக்க முடியும் என கூறியுள்ளார். மேலும் வீரர்கள் தடை ஓய்வறையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும், ராகுல், பாண்டியா தங்களது தவறை உணர்ந்துள்ளார்கள் எனவும் கோலி தெரிவித்துள்ளார்.