புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் -அகிலவிராஜ்

சிறுவர்களின் உளவியல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக தீர்மானம் எடுப்பது அத்தியாவசியமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சை தொடர்பான ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,
சிறுவர்களுக்கு ஏற்படும் உளவியல் தாக்கங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை தொடர்பாக காத்திரமான தீர்மானமொன்று எடுப்பது அத்தியாவசியமாகும்.
இருந்த போதிலும் குறைந்த வருமான பெறும் சிறார்களுக்கு புலமை பரிசில் வழங்கல் மற்றும் புதிய பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கல் ஆகிய விடயங்களில் உரிய கவனம் செலுத்தி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
இந்த ஆய்வு குழுக்கூட்டத்துக்கு கல்வி அமைச்சின் செயலாளர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள், சிறுவர்கள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்கள்,  பல்கலைகழக பேராசிரியர்கள்,தேசிய கல்வி நிறுவன அதிகாரிகள், பரீட்சை ஆணையாளர் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.