தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் திருவாரூர் தொகுதியில் கலைஞர் மறைவு, திருப்பரங்குன்றத்தில் எம்எல்ஏ போஸ் மறைவு, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தினால் 18 தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகள் காலியாக இருக்கின்றது.
இந்த தொகுதிகளுக்கு எப்பொழுது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்து கொண்டிருந்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன் வழக்கு தொடர்ந்து உள்ளதால் அங்கு தற்போது இடைத்தேர்தல் நடத்த முடியாத சூழல் உள்ளது.
திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 7-ந் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதால் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தற்பொழுது இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், ஜனவரி 31ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.