யாழ்ப்பாணத்தை கலக்கிய ஆவா குழு தலைவர்கள் கைது!

ஆவாக்குழுவைச் சேர்ந்த பயங்கர ரௌடிகள், உள்ளிட்ட கும்பலை கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து ​வாள்களையும் பொலிஸா​ரால் மீட்டுள்ளனர்.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று (18) அதிகாலை 3 மணியளவில் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து ரௌடிகளை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 11 பேரில் இரண்டு பேர் ஆவா குழுவின் தலைவர்களாக அடையாளம் காணப்பட்ட பயங்கர ரௌடிகளான போல் விக்டர் மற்றும் அஞ்சித் ஆவர். ஏனைய 9 இளைஞர்களும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 11 பேரும் சுமார் 22 வயது முதல் 24 வயதுடையவர்கள் என்றும், இவர்கள் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் வாகனம் ஒன்றிலும், மோட்டார்சைக்கிளிலும் பயணித்த போதே, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கைதுசெய்துள்ளனர். அவர்கள் பயணித்த வாகனத்தை சோதனையிட்ட போது, 6 வாள்களும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட 11 இளைஞர்களும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு; விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பின்னர் 11 பேரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.