அண்ணா அறிவாலய வளாகத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். அவருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலும், திமுக பொது செயலாளர் க.அன்பழகன் முன்னிலையிழும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழா முடிந்த உடன் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களும், தோழமை கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
அண்ணா அறிவாலய வளாகத்தில் அமைத்துள்ள அரங்கில் டி.ராஜா, திருமாவளவன், முத்தரசன், வைகோ, நடிகர் ரஜினி, நாசர், பிரபு, விவேக், வைரமுத்து, குஷ்பூ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
விழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டது பெருமையாக உள்ளதாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் வடிவேலு அவர்கள், ”வலிமைமிக்க ஒரு திறமையான தலைவர் கருணாநிதி அவர்கள். அவரின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.
பின் செய்தியாளர், திமுகவில் நீங்கள் மீண்டும் இணைவீர்களா?, திமுகவிற்காக பிரச்சாரம் மேற்கொள்வீர்களா?” என்று நடிகர் வடிவேலுக்கு கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த வடிவேல், ”நான் இங்கு சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள தான் வந்தேன், கட்சியில் சேர அல்ல, தேர்தல் வர நாள் உள்ளது, இப்பவே சொல்லியாக வேண்டுமா?” என்று அவரது பாணியில் பதில் அளித்தார்.